அந்நியச் செலாவணி கையிருப்பு 42,005 கோடி டாலராக உயர்வு
- நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,005 கோடி டாலரை (ரூ.29.40 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 136 கோடி டாலர் (ரூ.9,520 கோடி) உயர்ந்து 42,005 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
- இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 17 கோடி டாலர் உயர்ந்து 41, 869 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 135 கோடி டாலர் உயர்ந்து 39,222 கோடி டாலராக காணப்பட்டது.
ஸ்கூல்பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேமலதா என்பவர் தொடர்ந்த வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐங்கரன் காபி பெயரை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
- கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் சென்னை,கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீ மற்றும் காபி ஸ்டால் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
- இந்த உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் எங்களுக்கு சொந்தமாக 35 கடைகள் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது எங்களது வர்த்தக முத்திரை ஆகும். காப்புரிமை சட்டத்தின் கீழ் இதற்காக உரிமம் பெற்றுள்ளோம்.
- இதன்படி, கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. ஆனால், ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோட்டில் தமிழ்செல்வி என்பவரும், தஞ்சாவூர் வடக்கு தெருவில் அகிலாண்டேசுவரி என்பவரும் உணவகம் நடத்தி வருகின்றனர்.
- இது எங்களது வர்த்தக உரிமைக்கு எதிரானதாகும். எனவே, அவர்கள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
- இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோடு, வடக்கு தெரு ஆகியவற்றில் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஒடிஸா கடலோரப் பகுதிகளில் "பசுமை அரண்' அமைக்க திட்டம்: மாநில அரசு ஒப்புதல்
- ஒடிஸா கடலோரப் பகுதிகளில் "பசுமை அரண்' அமைக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பானி புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை நடும் பணியில் ஒடிஸா அரசு மும்முரமாக ஈடுபடவுள்ளது.
- மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசிய பானி புயலால் புரி கடற்கரையொட்டிய பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
- இந்த நிலையில், பசுமையை தக்க வைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒடிஸா தயாராகி வருகிறது. இதற்காக, ரூ.188 கோடி செலவில் ஐந்தாண்டுகளுக்கு மரங்கள் நடும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. புரி, புவனேசுவரம் மற்றும் கட்டாக் நகரங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மணிப்பூர் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு
- மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை மக்களவை தேர்தலுக்குப் பின் வாபஸ் பெறப் போவதாக நாகா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
- மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணிக்கு தெரிவித்து எங்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தார்.
- எனினும், எங்கள் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என பாஜக தெரிவித்துள்ளது. 60 எம்எல்ஏக்கள் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில், 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர்கள் சென்றால் கூட எங்களுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் ஜப்பானில் வெற்றி
- ஜப்பானில் மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
- ஜப்பானின் செண்டாய் முதல் மொரியோகா வரை இந்த அதிவேக ரயிலை ஓட்டி சோதனை நடத்தினர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனினும், இன்னும் 3 ஆண்டுகளுக்கு சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும், உலகிலேயே அதிவேகம் இயங்கும் சக்கரங்கள் கொண்ட புல்லட் ரயில் இது என்றும் ஜப்பான் கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட்: வங்கதேசம் சாம்பியன்
- அயர்லாந்து, மே.இ.தீவுகள், வங்கதேசம் இடையே நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வென்ற பலநாடுகள் பங்கேற்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
- முத்தரப்பு போட்டி இறுதி ஆட்டத்துக்கு மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை இரவு டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் முதலில் ஆடிய நிலையில் 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. (ஷேய் ஹோப் 74, அம்ப்ரீஸ் 69 ரன்களை விளாசியிருந்தனர்.)
- இதையடுத்து வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்கள் வெற்றி இலக்காக டக்வொர்த் லெவிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.
- வங்கதேச அணி 22.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
- சௌமிய சர்க்கார் 66, மொஸாடேக் ஹூசேன் 52, முஷ்பிகுர் 36 ரன்களை சேர்த்தனர். மே. இ.தீவுகள் தரப்பில் கேப்ரியேல் 2-30, ரெய்ஃபர் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- ஆட்டநாயகனாக மொஸாடேக் ஹூசேன் தேர்வு செய்யப்பட்டார்.