சுந்தரம்-கிளேட்டன்: அமெரிக்காவில் ஆலை திறப்பு
- சுந்தரம்-கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய ஆலையை திறந்துள்ளது. இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைக்கும் முதல் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
- நிறுவனத்துக்கு வட அமெரிக்கா மிக முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இதனை உணர்ந்தே, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழிற் பூங்காவில் 50 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய வார்ப்பட ஆலை (படம்) அமைக்கப்பட்டுள்ளது.
- ரூ.630 கோடி (9 கோடி டாலர்) முதலீட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலம் முதல் ஆண்டில் 1,000 டன் வார்ப்பட பொருள்கள் தயாரிக்கப்படவுள்ளன.ஐந்தாண்டுகளில் இது 10,000 டன்னாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், வட அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையினை அளிக்க முடியும்.
- தற்போதைய நிலையில், நிறுவனத்தின் ஏற்றுமதியில் 60 சதவீத பங்களிப்பையும், வருவாயில் 40 சதவீத பங்களிப்பையும் அமெரிக்கா வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் சுந்தரம்-கிளேட்டன் தெரிவித்துள்ளது.
உதகையில் தொடங்கியது 5 நாள் மலர் கண்காட்சி: ஆளுநர் பங்கேற்பு
- உதகையின் பிரதான மலர் திருவிழாவான 123-ஆவது மலர் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
- கண்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகளில் மலர் ரகங்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல சுமார் ஒன்றரை லட்சம் கார்னேசன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடம் போன்ற பிரம்மாண்ட தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.
- 5,000 மலர் தொட்டிகளால் மலர் நீர்வீழ்ச்சியும், 3 இடங்களில் மலர் செல்பி ஸ்பாட்டுகளும், 10 மலர் அலங்கார வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஹாலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 2,000 துலீப் மலர்கள், 100 ஆர்கிட் மலர்கள், 100 கேலா லில்லி மலர்கள், ஆந்தூரியம் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தின் ஜெயப்பிரகாஷ் தேர்வு
- இந்திய நீச்சல் சம்மேளன வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- எஸ்.எப்.ஐ. எனப்படும் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஜெயபிரகாஷ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்பு இவர் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
- பொதுச் செயலாளராக க குஜராத்தைச் சேர்ந்த சோக்ஷி மோனலும், பொருளாளராக தெலங்கானாவைச் சேர்ந்த மேகலா ராமகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- துணை தலைவர்களாக பால்ராஜ் சர்மா (பஞ்சாப்), ராஜிவ் சுகுமாறன் நாயர் (கேரளா), கமலேஷ் நானாவதி (குஜராத்), பியூஷ் சர்மா(ம.பி.), அணில் வியாஸ் (ராஜஸ்தான்), இணை செயலாளர்களாக ஆர்.பி.பாண்டே (பீகார்), ரவின்கபூர்(உ.பி.), மோகன் சதீஷ்குமார் (கர்நாடகா), அணில் காத்ரி (ஹரியாணா) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் 4 ஆண்டுகள் பதவி வகிப்பர்.
ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய கடற்படை புதிய சாதனை
- இந்தியாவின் தெற்கு கடற்கடை பகுதியில், இந்திய கப்பற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். சென்னை மூலமாகஇந்த சோதனையானது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. கப்பல்களில் வைக்கப்பட்ட ஏவுகணைகள், வானில் இருந்து வந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன.
- இந்திய கடற்படை, டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து, இந்த சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படையின் ஒரு முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது.
சூரியனின் வெளிப்பரப்பை ஆராய "மிஷன் ஆதித்யா' திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
- சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு "மிஷன் ஆதித்யா' திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இஸ்ரோ சார்பில் "யுவிகா 2019' என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
- இதையடுத்து அறிவியல் திறனறிவு, கண்டுபிடிப்புகள் உள்பட பல்வேறு தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 108 மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஜே.கே. ஆதித்யா, ஆர். நித்யாராஜ், பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்
- அமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.
- அமெரிக்காவில் கிரீன் கார்ட் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து வேலை பார்க்கவும், அங்கேயே வசிக்கவும் இது உதவும். இது ஒரு காலவரம்பற்ற விசா போன்றது. கிரீன் கார்ட் கொண்டவர்கள் ஐந்து வருடம் அமெரிக்காவில் வசித்தால் அவர்களால் அங்கு குடியுரிமை பெற முடியும்.
- மொத்தமாக 1 வருடத்தில் 1 மில்லியன் மக்களுக்கு அங்கு கிரீன் கார்ட் அளிக்கப்படுகிறது. ஆனால் இதில் 88 சதவிகிதம் பேர் திறமையின் அடிப்படையின் கிரீன் கார்ட் பெறுவது கிடையாது. வெறும் 12 சதவிகிதம் பேர்தான் திறமையின் அடிப்படையில் கிரீன் கார்ட் பெறுகிறார்கள்.
- இந்த நிலையில் இந்த முறையை மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.
- ஒரு வருடத்தில் எத்தனை கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்ததோ அதே அளவிற்குத்தான் இனி பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.
ஒரு பாலின திருமணச் சட்டத்தை நிறைவேற்றியது தைவான்: ஆசியாவில் இதுவே முதன்முறை
- ஆசியாவின் முதல் நாடாக ஒரு பாலின திருமணத்தை தைவான் நாடு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
- ஒரு பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தைவான் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மே 24 ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
- இதையடுத்து, ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றியதன் மூலம், அந்நாட்டின் அரசுத் துறைகளில் ஒரு பாலின திருமணத்தை வரும் காலங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
- இதன்மூலம், ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.