தமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
- இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கத்தின் பட்டியலில் சேர்த்தன. கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனும் தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைத்தது.
- இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
- அதில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது. எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படவில்லை.
- இந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
- தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்
- CBSC நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து CBSC கடந்த ஜனவரி மாதம் விளம்பரம் செய்தது. இந்த அறிவிப்பில் "மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தது.
- இதனையடுத்து இந்த விளம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டி காட்டி., ஆசிரியர் தகுதி தேர்தில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- மேலும், அந்த "தகுதிச் தேர்வுகளுக்கு எக்காரணம் கொண்டும் இடஒதுக்கீடு வழங்க இயலாது. அது முற்றிலும் தவறானதாகிவிடும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்ற நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
- முன்னதாக CBSC வெளியிட்டுள்ள அறிக்கையில் ''எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எந்தவொரு இடஒதுக்கீடும் கொடுக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது'' குறிப்பிடத்தக்கது.
பி.சுசீலாவிற்கு கம்பன் விருது கொடுத்து கௌரவித்த புதுவை முதலமைச்சர்
- புதுச்சேரியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில், வருடம் தோறும் நடைபெறும் கம்பன் விழா நேற்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு கம்பன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
அப்யாஸ் ஆளில்லா விமான சோதனை வெற்றி
- எதிரி நாட்டு விமானங்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அப்யாஸ் ஆளில்லா விமானத்தை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
- ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் திங்கள்கிழமை அப்யாஸ் ஆளில்லா விமானம் சோதித்துப் பார்க்கப்பட்டது. முழுவதும் தன்னிச்சையாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானத்தில் சிறிய அளவிலான எரிவாயுவில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
- இது அதிவிரைவாகச் சென்று எதிரி நாட்டு விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது.
4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
- டெல்லி, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
- நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் மட்டும் தலைமை நீதிபதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நீதிபதிகள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
- இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி. ரமணா ஆகியோர் கொண்ட கொலிஜியம் அமைப்பு, குஜராத் நீதிமன்ற நீதிபதி டி.என்.படேலை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளது. தற்போது படேல் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
- தற்போது டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் ராஜேந்திர மேனன் வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதேபோல, தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஆர்எஸ்.சவுகானை, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, தற்போது மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஏ.ஏ.குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- இமாச்சலப் பிரதேச நீதிபதியாக இருந்த சூர்ய காந்த் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் விஷால் தாகத், விஷால் மிஸ்ரா ஆகியோரை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளது கொலிஜியம் அமைப்பு.
ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் : முதல் இடத்தை தட்டிச் சென்ற ஹாமில்டன்
- ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா – கேடலுன்யா கார் பந்தய தளத்தில் நடந்த புகழ்பெற்ற ஃபார்முலா கார் பந்தயத்தின் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி தொடங்கியதும் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் கார்கள் ஒன்றோரு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்தன.
- அனல் பறந்த இந்த கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் லீவிஸ் ஹாமில்டன் போட்டி தூரத்தை ஒரு மணி நேரம் 35 நிமிடம் 50 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை தட்டிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பொட்டாஸ் 2வது இடத்தையும் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் 3ம் இடத்தையும் வென்றனர்.
மாட்ரிட் ஓபன்: சாம்பியன் ஜோகோவிச்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
- களிமண் தரை சீசனின் முதல் போட்டியான இதன் இறுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு மாட்ரிடில் நடைபெற்றது. உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸை வென்று பட்டம் வென்றார்.
- இந்த வெற்றி மூலம் நடாலுக்கு இணையாக 33-ஆவது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச்.