மகளிர் தினத்தை முன்னிட்டு விமான சேவை முழுவதையும் பெண்கள் கையாள்வார்கள்: ஏர் இந்தியா அறிவிப்பு
- மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து விமான சேவைகளையும், இன்று பெண்கள் கையாளுவார்கள் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அதன்படி, வெளிநாட்டு சேவைகளுக்கான 12 விமானங்களிலும், உள்நாட்டு சேவைகளுக்கான 40 விமானங்களையும் முற்றிலுமாக பெண் விமானிகள் இயக்குவார்கள் என்றும், இதில் விமான பணிப்பெண்கள் குழு மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விமான வழித்தடங்கள்: தில்லி - சிட்னி, மும்பை - லண்டன், தில்லி - ரோம், தில்லி - லண்டன், திம்பை - தில்லி - ஷங்காய், தில்லி - பாரீஸ், மும்பை - நியூயார்க், தில்லி - நியூயார்க், தில்லி - வாஷிங்டன், தில்லி - சிகாகோ இடையேயான வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்க உள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா
- மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு உபகரணங்கள் கையாளும் குழுவின் (Defence Acquisition Council) கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
- அப்போது 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இந்திய கடற்படைக்கு புதிதாக 3 பயிற்சி கப்பல்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கி கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது.
- ஏற்கனவே 1988 ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது. மேலும் இந்த கப்பல்கள் மருத்துவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும் வகையில் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவ சீர்திருத்தத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்
- ராணுவத்துறையில் மெகா சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து முப்படையினை வலுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
- இதன்படி ராணுவ தலைமையகத்தில் 200-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தல் , ராணுவ நடவடிக்கைகளுக்கான துணை ஜெனரல் போன்ற புதிய பதவிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மெகா சீர்திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்துக்கு 4 பள்ளிகள் மத்திய அரசு அனுமதி
- தமிழகத்தில், நான்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
- இதில், நாடு முழுவதும், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகத்தில், நான்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி, கோவை மாவட்டம் - கிட்டாம்பாளையம், மதுரை மாவட்டம் - இடையபட்டி, சிவகங்கை மாவட்டம் - இலுப்பைகுடி மற்றும் திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவுள்ளன.
- மேலும், டில்லியில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை புறநகர் போக்குவரத்து திட்டம் ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
- உத்தர பிரதேசம், பீஹார் மாநிலங்களில், தலா, இரண்டு அணுமின் நிலையங்கள் அமைக்கவும், ஜம்மு - காஷ்மீரில், நீர்மின் நிலையம் அமைக்கவும், நேற்றைய கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.நாட்டில் உள்ள சிறுநகரங்களை இணைக்கும் வகையிலான விமான போக்குவரத்து திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள, பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம், 2018ம் ஆண்டுக்கான தரமான சேவைகளை வழங்கியதற்கான, ஏ.எஸ்.க்யூ., விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பல்கலை ஆசிரியர் இட ஒதுக்கீடு அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
- கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்வதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், '200 பாயின்ட்' எனப்படும், இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி, கல்லுாரி அல்லது பல்கலை, ஒரு அமைப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.அதில், 200 பணியிடங்கள் இருந்தால், எஸ்.சி., - எஸ்.டி., - மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என, இட ஒதுக்கீட்டின் மூலம், அவர்களுக்கு, 99 இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள, 101 இடங்கள், பொதுப் பிரிவாக இருக்கும்.
புகை மாசு: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
- ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோக்ஸ்வேகன் நிறுவனம், பாதுகாப்புகள் நிறைந்த டீசர், பெட்ரோல் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் டீசல் கார்களில், இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகமான அளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது தெரியவந்தது.
- தீர்ப்பு கூறிய தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி,ஆதர்ஷ் குமார் கோயல், வோக்ஸ்வேகன் டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான உபகரணத்தை பொருத்தியதால் ரூ. 500 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராத தொகையை 2 மாதங்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
முதல்முறையாக வெளியிடப்பட்டது 20 ரூபாய் நாணயம்
- பலகோணங்கள் கொண்டு, நாட்டில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
- இதனுடன் சேர்ந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களும் புதுப்பொலிவுடன் வடிவமைப்பு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவைகளில் இருக்கும் வடிவ அம்சங்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம், 8.54 கிராம் எடை இருப்பதோடு, அதன் வெளிப்புற விட்டம் 27 மில்லிமீட்டர் அளவில் இருக்கும். அதன் வெளிப்புற வளையம், 65% செம்பு, 15% துத்துநாகம் மற்றும் 20% நிககல் ஆகிய உலோகங்களைக் கொண்டுள்ளது.
- உள்புற வளையமோ, 75% செம்பு, 20% துத்தநாகம் மற்றும் 5% நிக்கல் ஆகிய உலோகங்களைக் கொண்டுள்ளது.
- இந்த நாணயத்தின் முன்பக்கம், அசோக ஸ்தூபியில் உள்ள சிங்க உருவம் பொறிக்கப்பட்டு, அதன்கீழே வாய்மையே வெல்லும் என்ற வாசகம் இந்தியில் இடம்பெற்றுள்ளது. அதன் கீழே, இந்திய ரூபாய் குறியீட்டுடன் 20 என்ற எண் இடம்பெற்றுள்ளது.
- நாணயத்தின் இடப்புற சுற்றளவில் 'பாரத்' என்ற வார்த்தை இந்தியிலும், வலப்புற சுற்றளவில் 'இந்தியா' என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.2,790 கோடி ஒதுக்கீடு
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 2,790 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
- மேலும் உத்தரபிரதேசத்தில் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி அனல்மின் நிலையத்திற்க்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கவும்,பீகாரில் 1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கவும் ஒப்புதலும் வழங்கப்பட்டு உள்ளது.
மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்
- இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான மாசு நிறைந்த நகராகும். இங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் காற்று மாசுவே என்பதையும் உணர்ந்துள்ளனர்.
- இத்தகைய காற்று மாசு நம் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் பாழாக்கிவிடும்.காற்று மாசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், மருந்துகளுக்காக மட்டும் கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 225 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.
- இத்தகைய பிரச்சினை தெற்காசியாவிலேயே அதிகம் உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள 20 நாடுகளில் முதல் எட்டு இடத்தில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன.
2018-19 ஆண்டுகளுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள் : கிரேடு ஏ+ பும்ரா
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான 2018-2019ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி கிரேடு பி-யில் கே.எல் ராகுல் , உமேஷ் யாதவ் ,ஹால், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். கிரேடு சி-யில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, சாஹா ஆகியோர் உள்ளனர்.
- கிரேடு ஏ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, அஜிங்கியா ரஹனே, எம்.எஸ். தோனி, ஷிகார் தவான், ஷாமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பந்த் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
- கிரேடு ஏ+ விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.