உள்நாட்டில் தயாரான ஏவுகணை சோதனை வெற்றி
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இரு, அதிநவீன ஏவுகணைகள், ஒடிசா மாநிலம், பாலசோர் கடற்கரை அருகே, நேற்று(பிப்.,26) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
- பாலசோர் அருகே, சந்திப்பூரில், ஒருங்கிணைந்த சோதனை மையம் உள்ளது. இங்கு, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய, இரு அதிநவீன ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது: ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
- விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷனல், எகல் அபியான் அறக்கட்டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
- கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா ஆகிய அமைப்புகள் 2015-ஆம் ஆண்டில் காந்தி அமைதி விருதுக்கு இணைந்து தேர்வு செய்யப்பட்டது.
- சுலப் அமைப்பு 2016ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும், எகல் அமைப்பு 2017ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டன. 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு யோஹெய் சஸாகாவா அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.
பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இல்லம் : கேரள ஆளுநர் சதாசிவம் திறந்துவைத்தார்
- மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவனூரில் உள்ளது. சிறு வயதில் இங்கு எம்.ஜி.ஆர். தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாகச் செயல்பட்டு வருகிறது.
- அவரது நண்பர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் சிலர் இணைந்து சிதிலமடைந்த வீட்டை ரூ.50 லட்சம் செலவில் புனரமைப்பு செய்தனர். இப் பணிகள் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்தன.
- இந்நிலையில், புனரமைப்பு செய்யப்பட்ட வீட்டின் திறப்பு விழா வடவனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட வீடு மற்றும் முகப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையையும் திறந்துவைத்தார்.
அமேசான் இயக்குனர் குழுவில் இந்திரா நுாயி
- 'பெப்சிகோ' நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி, அமெரிக்காவின், 'அமேசான்' நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.
- சென்னையைச் சேர்ந்த, இந்திரா நுாயி, 1994ல், பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, நிதி, திட்டம், கொள்கை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார்.பெப்சிகோ நிறுவன இயக்குனர் குழு உறுப்பினராக, 2001ல், தேர்வு செய்யப்பட்டு, தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில், திறம்பட செயலாற்றினார்.
- கடந்த, 2006 அக்டோபர் முதல், 2018 அக்டோபர் வரை, தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றார்.
- இவர், வர்த்தகத்தில் நவீன உத்திகளையும், புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தி, பெப்சிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தார். இந்திரா நுாயி, தற்போது, அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஸ்டார் பக்ஸ் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி, ரோசலின்ட் புரூவர், சமீபத்தில், அமேசான் இயக்குனர் குழுவில் இணைந்தார்.இதன் மூலம், அமேசான், ஒரே மாதத்தில், வெள்ளையரல்லாத இரு பெண்களை இயக்குனர் குழுவில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2ம் முறையாக சர்ஜிக்கல் தாக்குதல்
- புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா விமானப்படை நடத்திய துல்லியதாக்குலால் பாகிஸ்தானே தற்போது நிலைகுலைந்து போயியுள்ளது. பாகிஸ்தான் மீது 2வது முறையாக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
- இந்தியா விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத முகாம்களில் இருந்த சுமார் 300 பேர் சாம்பல் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சுமார் ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகாலையில் தாக்குதல்:
- எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன.
- இந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதில் சுமார் 1000 கிலோ வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்டது.