சென்னை அருகே 44 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
- சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில் 336 குறைந்த வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
- இதேபோன்று, கொரட்டூர் திட்டப் பகுதியில் 222 குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 90 வீடுகளையும் முதல்வர் திறந்து வைத்தார். இதேபோன்று, ஈரோடு மாநகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 448 அடுக்குமாடி குடியிருப்புகள், வேலூர் டோபிகானா பகுதியில் கட்டப்பட்ட 224 குடியிருப்புகளையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நாட்டின் 16வது கடலோரக் காவல்படை தலைமையகம் - தூத்துக்குடியில் துவக்கி வைத்தார் ஆளுநர்
- கடலோரக் காவல்படை மையத்தின் தென்பகுதி தலைமையகமாகத் தூத்துக்குடி கடலோரக் காவல்படை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் 16 வது கடலோர காவல் படையின் இத்தலைமையகத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
- கடல்பகுதி பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி, இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி கடலோர காவல் படை தனி தலைமையகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதற்காக, கிழக்கு கடற்கரையில் 150 கி.மீ., தொலைவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, வங்க கடலின் கோடியக்கரை முதல், அரபிக் கடலின், பூவார் ஏரியின் கழிமுகத் துவாரம் வரையில் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுடன் புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
- தற்போதுள்ள 3 ரோந்துக் கப்பல்கள், மண்டபம் கடலோர காவல்படையில் உள்ள 3 ஹோவர்கிராப்ட் கப்பல்கள் இவற்றுடன் புதிதாக 5 ரோந்து கப்பல்கள் விரைவில் தூத்துக்குடி கடலோர காவல்படையில் இணைக்கப்படுகிறன.
- ஹெலிகாப்டர் இறங்கும் வசதி கொண்ட ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா மற்றுமொறு புதிய ரோந்துக் கப்பல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி வருகிறது. அதனைத் தொடர்ந்து, மேலும் 3 ரோந்துக் கப்பல்கள் தூத்துக்குடி கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன.
வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்ட நடைமுறைகளுக்கு தனி இணையதளம்
- வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை பொது மக்கள் எளிதாக அறிந்து கொள்ள தனி இணையதளத்தை (www.tenancy.tn.gov.in) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
- இந்த இணையதளத்தில் சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இணைய சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்பு
- சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-ஆக உள்ளது.
அண்ணா மேலாண்மைப் பயிற்சி இயக்குநராக இறையன்பு நியமனம்: ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
- அசோக் டோங்ரே- தொழில் முதலீட்டாளர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் (சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர்).
- வெ.இறையன்பு: அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (தொழில் முதலீட்டாளர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர்).
- கே.பணீந்திர ரெட்டி: இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் (அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டிருந்தது. இப்போது முழுநேரமாக அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.).
- பி.விஷ்ணு சந்திரன்: நாகர்கோவில் சார் ஆட்சியர் (பரமக்குடி சார் ஆட்சியர்).
- ஆஷா அஜித்: திருச்செந்தூர் சார் ஆட்சியர் (தேவக்கோட்டை சார் ஆட்சியர்).
- பவன்குமார் ஜி.கிரியப்பனவார்: தாராபுரம் சார் ஆட்சியர் (நாகர்கோவில் சார் ஆட்சியர்).
- கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்: வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் (தாராபுரம் சார் ஆட்சியர்).
- டி.என்.ஹரிஹரன்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநர் (கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர்).
இந்தியா தென்கொரியாக்கிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
- இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தென்கொரியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலுக்கு சென்ற பிரதமர் மோடி_க்கு தென்கொரியா நாட்டின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக பார்க்கப்பட்ட இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் , இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விவசாயிகளுக்கு 2 ஆயிரம் திட்டத்தை கோரக்பூரில் தொடங்குகிறார் மோடி
- மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு பல முக்கிய அறிவிப்புகளை அளித்திருந்தது. அதில் சிறு, குறு விவசாயிகள் பயன்படும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அது 'பிரதம மந்திரி கிஷான் சம்மான் நீதி' என்ற திட்டம்.
- இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு 2 ஹெக்டர் நிலமுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரத்தை மூன்று தவணைகளாக வழங்கும். அதன்படி ரூ 2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 75000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் 1 பிப்ரவரி 2019 வரையுள்ள நில ஆவணங்களை வைத்து கண்டறியப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புரோ வாலிபால் லீக்: சென்னை ஸ்பார்டன்ஸ் சாம்பியன்
- புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தட்டிச் சென்றது. காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற நேர் செட்களில் வென்றது சென்னை
- இறுதியில் 15-11, 15-12, 16-14 என நேர் செட்களில் காலிக்கட் அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை.