17th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட கூட்டம்
- இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான 'ககன்யான்' குறித்து விவாதிக்கப்பட்டது.
- மேலும் இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 'ககன்யான்' திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
- இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் திட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது. ககன்யான் திட்டம் என்பது விண்ணில் செலுத்துவதற்கு முன்பு 20 முறை சோதனைகள் செய்யப்பட உள்ளது.
- மேலும் 3 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அக்டோபர் 21ல் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- அதன்பிறகு பிரதமர் மோடி பல்வேறு அறிவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். அதாவது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2025ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என்று பிரத்யேகமாக இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்க வேண்டும்.
- மேலும் 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து நிலவுக்கு விண்வெளி வீரரரை அனுப்ப வேண்டும். இந்த இலக்குகளை நிறைவேற்றும் வகையில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
- விண்வெளி துறையில் நிலவு குறித்த ஆய்வுக்கான சார்ட்டுகளை உருவாக்கி படிப்படியாக அதனை நிறைவேற்றம் செய்ய வேண்டும்.
- இந்தியாவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான என்ஜிஎல்வி, புதிய விண்வெளி ஏவுதளம் அமைத்தல், ஆய்வு மையங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
- உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2023) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார்.
- இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047-உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.
- கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் 3-வது பதிப்பிற்கு அனைவரையும் வரவேற்றார்.
- முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
- மேற்கத்திய நாடுகளை போல் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமில்ல என கடந்த 2018 ஆம் ஆண்டு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டத்தில் இடமில்லாத நிலை இருந்தது.
- ஆனால், அவ்வப்போது ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் இந்தியாவிலும் ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கை LGBTQ சமூகத்தினர் இடையே வலுத்து வந்தது.
- இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பலரால் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதில் மத்திய அரசு ஒருபாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது.
- விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
- அதில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். ஓரினச்சேர்க்கையை நகர்புற வாழ்வியலோடு இணைந்தது என மத்திய அரசு தெரிவித்த கருத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், திருமணம் நிலையான கட்டமைப்பு என்பதையும் மறுத்தார்.
- திருமண சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அவற்றை சட்டப்படியே கொண்டு வர முடியும் என தெரிவித்தார். சிறப்பு திருமண சட்டம் ரத்தானால் விடுதலைக்கு முந்தைய காலத்துக்கு நாட்டை கொண்டு செல்வதாகும் எனக் கூறிய அவர், தன்பாலின திருமண விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார். ஓரின சேர்க்கையாளார்கள் சமூகத்தில் அமைதியாக வாழவும், யாரோடு சேர்ந்த வாழ வேண்டும் என்ற சுதந்திரமும் இருப்பதாக கூறினார்.
- இதற்கு மாறுபட்டு நீதிபதி கவுல், நீதிபதி பட், நீதிபதி நரசிம்மா ஆகியோரும் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை. அதே நேரம் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து இருப்பதால் LGBTQ சமூகத்தினரின் உரிமைகளை அரசுகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அறிவுறுத்தி உள்ளது.
- இந்தியக் கடலோரக் காவல்படைக்கான ஒரு பயிற்சிக் கப்பலை ரூ.2,310 கோடி செலவில் கட்டமைக்க மும்பையில் உள்ள மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஆக்டோபர் 17-ம் தேதி கையெழுத்திட்டது.
- ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் திறன்களைக் கொண்ட முதல் சிறப்புப் பயிற்சித் தளமாக இது இருக்கும். 70 கடலோர காவல்படை மற்றும் பிற சர்வதேச பயிற்சி அதிகாரிகளுக்குப் பல பரிமாண கடல்சார் அம்சங்கள் குறித்து வளர்ந்து வரும் கடற்படையினரைத் தயார் செய்வதற்கான அடிப்படைக் கடல் பயிற்சியை இது வழங்கும்.
- மேம்பட்ட மற்றும் நவீன உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்ட இந்தப் பயிற்சிக் கப்பல் கடலோர மற்றும் கடல் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் கடலில் உள்ள சவால்கள் குறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு ஆழமான நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும்.
- பெரும்பாலான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் எம்.எஸ்.எம்.இ உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் கணிசமான வேலைவாய்ப்பை உருவாக்கும்.
- 'தற்சார்பு இந்தியா' நோக்கங்களை நிறைவேற்றும் அதே வேளையில், இந்த ஒப்பந்தம் உள்நாட்டுக் கப்பல் கட்டும் திறனை அதிகரிப்பதுடன் கடல்சார் பொருளாதாரத் திறன்களை மேம்படுத்த உதவும்.
- வெளியுறவு துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வரும் அரிந்தம் பாக்சி, ஐ.நா.,வின் அடுத்த இந்திய துாதராகவும், ஜெனிவாவில் உள்ள மற்ற சர்வதேச அமைப்புகளின் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதை தொடர்ந்து வெளியுறவுதுறை புதிய செய்தி தொடர்பாளராக, ஜி - 20 இணை செயலர் நாகராஜ் நாயுடு, மொரீஷியஸ் துாதர் நந்தினி சிங்லா உள்ளிட்டோர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.