Type Here to Get Search Results !

18th May 2023 TAMIL TNPSC CURRENT PDF TNPSC SHOUTERS


18th May 2023 TAMIL TNPSC CURRENT PDF TNPSC SHOUTERS

உலகத்தரத்தில் திருநெல்வேலியில் ரூ.33 கோடியில் பொருநை அருங்காட்சியகம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
  • தமிழகத்தின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை ஒரே இடத்தில் 'பொருநை நாகரிகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் திருநெல்வேலியில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 செப். 9-ம் தேதி சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
  • அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமம்,மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 5.276 எக்டேர் (13.02 ஏக்கர்) நிலப்பரப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. 
  • இதில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். இந்நிலையில், 55,500 சதுர அடியில் ரூ.33.02 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • இந்த அருங்காட்சியக வளாகத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாகக் கட்டிடம் என 4 முதன்மைப் பிரிவுகள் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் இப்பகுதியின் வட்டார கட்டிடக்கலைத் தன்மையை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள், முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினைத் திறனின் கூறுகளைப் பயன்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மை மரபுகளை வெளிக்கொணரும் வண்ணம் புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பேராசிரியர் கா. ராஜன், முனைவர்கள் வி.ப. யதீஸ்குமார், முத்துக்குமார் மற்றும் பவுல்துரை ஆகியோர் நூலாசிரியர்களாக இணைந்து எழுதிய 'தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் - புதுக்கோட்டை வட்டாரம்' என்ற 2 தொகுதிகள் கொண்ட நூலைமுதல்வர் வெளியிட்டார்.
  • நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறை யின் செயலர் க. மணிவாசன், தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசா மாநிலத்தில் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி
  • ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக ஹவுரா-புரி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். மேலும், மொத்தம் ரூ.8,200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
  • இதேபோல, புரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்கள் சீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் ரயில் சேவையை 100 சதவீத மின்மயமாக்கும் திட்டம், சம்பல்பூர்-டிட்லாகர் இடையிலானஇரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
அருங்காட்சியக தின கண்காட்சி - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் 
  • சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 1,200 அருங்காட்சியகங்கள் பங்கேற்றுள்ளன. 
  • மேலும், டெல்லி கடமை பாதை பாக்கெட் வரைபடத்தையும் பிரதமர் வெளியிட்டார். முன்பு ராஜபாதை என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது கடமை பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
  • ரெய்சினா ஹில் வளாகம் முதல் இந்தியா கேட் வரையிலான கடமை பாதை வழித்தடத்தில் அமைந்துள்ள அரசுக் கட்டிடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இந்த வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன.
மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம்
  • மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் 2021 ஜூலையில் மாற்றப்பட்டு, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜுஜு, சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், நீதித் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
  • கடந்த மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரண் ரிஜுஜு, 'ஓய்வுபெற்ற நீதிபதிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். 
  • மேலும், பதவியில் இருக்கும் நீதிபதிகள், தங்கள் பதவி உயர்வு குறித்தே அதிகம் கவலைப்படுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார். கொலிஜியம் நடைமுறையையும் அவர் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார்.
  • இந்நிலையில், கிரண் ரிஜிஜுவிடம் இருந்து சட்ட இலாகா பறிக்கப்பட்டு, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருக்கும் அவர், சட்ட அமைச்சகத்தின் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.
  • மேலும் மத்திய சட்ட இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் மாற்றப்பட்டு, மத்திய சுகாதார இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சராக (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டம் செல்லும் - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
  • தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்றும் மாட்டுவண்டிப் பந்தயங்களை தடையின்றி நடத்தும் வகையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. 
  • இதேபோல, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் எருமை மாடுகளை வைத்து நடத்தப்படும் கம்பாலா போட்டிகளையும், மாட்டுவண்டிப் பந்தயங்களையும் தடையின்றி நடத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
  • இவற்றை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
  • இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது.
  • இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு, குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியிருப்பது சட்டப்பூர்வமானது. மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்குப் பிறகுதான், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
  • எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் கொண்டுவந்த சட்டத் திருத்தங்கள் செல்லும். இந்த விதிகள் கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
  • சில புகைப்படங்களையும், உயிரிழப்புச் சம்பவங்களையும் முன்வைத்து, ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது எவரும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. 
  • அப்படியிருக்கும்போது, இந்த விளையாட்டை, கொடூர விளையாட்டு என்று கூறமுடியாது. குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளிலும்கூட உயிரிழப்புகள் நேரிடுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel