15th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
- இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டு சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக நடப்பு 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் சிறுதானியங்கள் கண்காட்சியை இந்தியா ஏற்பாடு செய்தது.
- இந்தியாவில் பயிரிடும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் கொழுப்பு உள்ளடக்கம் குறித்து உலக அரங்குக்கு எடுத்துரைக்கும் விதமாக கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் பங்கேற்றனா்.
- ஜ.நா. பொதுச் சபையின் பிரதிநிதிகள் நுழைவு வாயில் அருகே உள்ள கண்காட்சி அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 17) வரை சிறுதானியங்கள் கண்காட்சி நடைபெறும்.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், லிதுவேனியா, லாவோ, கிரீஸ், கௌதமாலா, எஸ்வாட்டினி ஆகிய நாடுகளின் தூதர்கள் சமர்ப்பித்த நியமனப் பத்திரங்களை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
- நியமனப் பத்திரங்களை இன்று வழங்கியவர்கள் வருமாறு:
- திருமதி டயானா மிக்கிவிசியனே, லிதுவேனியா குடியரசுத் தூதர்
- திரு. பவுன்மி வான்மணி, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதர்
- திரு டிமிட்ரியோஸ் ஐயனோவ், கிரீஸ் தூதர்
- திரு உமர் லிசான்ட்ரோ காஸ்டனேடா சோலாரஸ், கௌதமாலா குடியரசுத் தூதர்
- திரு. மென்சி சிபோ ட்லாமினி, எஸ்வாட்டினி கிங்டம் தூதர்
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் துணைத் தொழில்களில் ஒத்துழைப்பதற்கு இந்தியா-சிலி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க, நவீன வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளில் ஒத்துழைப்பு அளிப்பதாகும்.
- மேலும், இருநாடுகளிலும் இயற்கை வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை பரிமாற்றம் செய்து கொள்வதை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
- இந்தியாவிலும், சிலியிலும் உள்ள கல்விக் கழகங்களில் வேளாண்துறை சார்ந்த அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் பங்களிப்புகளை கண்டறிவதும் பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- இந்த ஒப்பந்தத்தின்கீழ், சிலி-இந்தியா வேளாண் பணிக்குழு அமைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை மேற்பார்வையிடுதல், ஆய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கும் அதேபோல், தொடர்ச்சியான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை நிறுவுவதற்கும் இது பொறுப்பாகும்.
- இந்தப் பணிக்குழுவின் கூட்டங்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிலியிலும், இந்தியாவிலும் நடைபெறும். இதனை செயல்படுத்துவதற்கு கையெழுத்தாகும் தேதியிலிருந்து 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கு தாமாகவே புதுப்பிக்கப்படும்.
- மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரை இத்திட்டத்திற்கு ரூ.4800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடையாளம் காணப்பட்ட எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தரமான வாழ்க்கையை வழங்கி, வடபுறத்து எல்லை வட்டாரங்கள் மற்றும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு இது உதவும்.
- எல்லை கிராமங்கள் மேம்படுத்தப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள், வெளியேறிச் செல்லாதவாறு அங்கேயே தங்கியிருப்பதை இது ஊக்குவிக்கும். மேலும் இந்த கிராமங்களுக்கு பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
- நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள 4 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 46 எல்லைப்புற வட்டாரங்கள், 19 மாவட்டங்களில் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதும், தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- இதற்கு இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும். முதல் கட்டமாக 663 கிராமங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
- எழுச்சிமிகு கிராம செயல் திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் கிராமப் பஞ்சாயத்துக்களின் உதவியுடன் உருவாக்கப்படும். மத்திய, மாநில திட்டங்கள் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும்.
- எல்லைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்துடன் இத்திட்டம் சேராது. ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ.2500 கோடி சாலைகளுக்காக செலவிடப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் திறமை மிக்க வழிகாட்டுதலின் கீழும் செயல்படும் கூட்டுறவு அமைச்சகம் இதுவரை சேவைகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அமைக்க திட்டத்தை வகுத்துள்ளது.
- இதுவரை சங்கங்கள் இல்லாத ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கடலோரக் கிராமங்களில் மீனவக் கூட்டுறவு சங்கங்களை அமைக்கவும், தற்போதுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், மீனவ சங்கங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- தொடக்கக் கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களும், பால் கூட்டுறவு சங்கங்களும் , மீனவக் கூட்டுறவு சங்கங்களும் அமைக்கப்படும். இதை அமல்படுத்துவதற்கான திட்டம் நபார்டு வங்கி தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் தேசிய மீன்வள வாரியத்தால் வகுக்கப்படும்.
- இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அரசுகளுக்கு . இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும். இருநாடுகளும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டதற்கு இணங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கால வரம்புக்குள் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நவீன அறிவியல் ரீதியிலான நீண்டகாலம் நிலைத்து வரக்கூடிய செலவு குறைந்த உபகரணங்களை இரு நாடுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முடியும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த நிறுவனங்களின் கல்வித்தகுதி மற்றும் பயிற்சியில் ஒன்றுடன் ஒன்று அங்கீகாரம் வழங்கவும், தற்போதுள்ள விதிமுறைகள் குறித்த இணைப்பு நடைமுறை மூலம் உறுப்பினர்களை அனுமதிப்பதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
- இந்த ஒப்பந்தத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் தங்களின் கல்வித்தகுதி மற்றும் சேர்க்கை தேவைகளுக்கான தகவல் பரிமாற்றம், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுக் கொள்கை, விதிவிலக்குகள் மற்றும் இதர பொருத்தமான விஷயங்களில் மாற்றங்கள் செய்வதற்கும் இது வழிவகுக்கிறது.
- இந்த நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு பிரிட்டனில் அதிகபட்ச தொழில் வாய்ப்புகளை வழங்குவதுடன், பிரிட்டனில் உள்ள உலகளாவிய தொழில் வாய்ப்புகளையும் வழங்கும்.
- இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் இந்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முதலாவது வேளாண் பணிக்குழுக் கூட்டம் இன்று (15.02.2023) நிறைவடைந்தது.
- கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.
- உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, பருவநிலை அணுகுமுறையுடன் நீடித்த வேளாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய வேளாண்மை மதிப்புச் சங்கிலி மற்றும் உணவு நடைமுறைகள், வேளாண் துறையில் மாற்றத்திற்கான டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய நான்கு கருப்பொருள்களின் மீதான விவாதங்களுடன் இன்றைய நிறைவுநாள் தொழில்நுட்ப அமர்வு தொடங்கியது.
- ஒவ்வொரு அமர்வின் போதும், திறந்த முறையிலான விவாதங்கள் நடைபெற்றன. பிரதிநிதிகள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர்.