மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்
- கோல்டன் விசா என்பது ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
- இந்த நிலையில், கொரோனா காலக்கட்டம் மற்றும் பிற சமயங்களில் சமூக சேவையில் ஈடுபடுபவர்களை கவுரப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
- இந்த விசாவை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது யாசின் என்பவருக்கு வழங்கியுள்ளது. மனிதநேயத்திற்கான கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தங்கம் வென்றார் அர்ஜுன்
- தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரரான அர்ஜுன் பாபுதா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் லூகாஸ் கோசெனிஸ்கியை எதிர்த்து விளையாடினார்.
- இதில் அர்ஜுன் பாபுதா 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் அர்ஜுன் பாபுதா வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் பிரம்மாண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த 2020 டிச. 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.
- பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்படுகின்றன.
- நாடாளுமன்ற கட்டுமான பணியை டாடா நிறுவனமும், நாடாளுமன்ற வளாக கட்டுமானப் பணியை ஷபூர்ஜி பலோன்ஜி குழுமமும் மேற்கொள்கிறது. வரும் அக்டோபர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை 80 சதவீத கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
- இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புதிய நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.