தேசிய கயிறு மாநாடு 2022
- சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவின் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் மே 5 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கயிறு மாநாடு 2022-ஐ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
- இந்த நிகழ்ச்சியில், 44 கயிறு மற்றும் கயிறு பொருட்கள், உற்பத்தி / ஏற்றுமதி பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- இயற்கையான, எளிதில் மட்குகின்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த கயிறு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கு மே 6 அன்று கயிறு பொருட்களுக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற ஜெய் பீம்
- பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில், இண்டி ஸ்பிரிட் சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளை ஜெய்பீம் வென்றுள்ளது.
- நடிகை லிஜோமோல் ஜோஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் முறையே இண்டி ஸ்பிரிட் சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றனர்.
ஜம்முவுக்கு 43, காஷ்மீருக்கு 47 சட்டப்பேரவை தொகுதிகள் - மறுவரையறை நிறைவுக்குப் பின் அறிவிப்பு
- கடந்த 2019-ம் ஆண்டு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
- ஜம்மு - காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.
- இந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இறுதி எல்லை நிர்ணய ஆணை அறிக்கையின் விவரம்: எல்லை நிர்ணயச் சட்டம் 2002 பிரிவு, 9(1) (a),ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 பிரிவு 60 (2) (b) விதிகளின் படி, இந்தப் பகுதியில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 43 ஜம்மு - பிராந்தியத்திலும், 47 காஷ்மீர் பிராந்தியத்திலும் இருக்கும்.
- அசோசியேட் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், குடிமக்கள், சிவில் சமூக குழுக்களுடன் நடந்த கலந்தாலோசனைக்கு பின்னர், 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும், 3 தொகுதிகள் காஷ்மீரிலும் உள்ளன.
- இந்தப் பகுதியில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இறுதி எல்லை நிர்ணய ஆணையம் ஜம்மு - காஷ்மீர் பகுதியை ஒரே யூனியன் பிரதேசமாக பார்த்தது.
- அதனால், காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக் பகுதியையும், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி, பூஞ்ச் பகுதியையும் இணைத்து ஒரு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி மறுசீரமைப்பு மூலம், ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் சமமான அளவில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும்.
- ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டப்பேரவை மற்றும மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யவதற்காக எல்லை நிர்ணய சட்டம் 2002 பிரிவு 3-ன்படி, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மக்களவை உறுப்பினர்கள் இந்த ஆணையத்தில் இருந்தனர். ஆணையத்தின் இந்த இணை உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகரால் பரிந்துரைக்கப்பட்டனர்.
- ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சானா தேசாய் தவிர, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையர் கே கே ஷர்மா ஆகியோர் எல்லை நிர்ணயக் குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருந்தனர்.
- இந்தக் குழுவில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்கள் ஃபரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி, பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜகவின் ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய ஐந்து இணை உறுப்பினர்கள் இருந்தனர்.
- 'அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகள் (பிரிவு 330 மற்றும் பிரிவு 332) மற்றும் ஜம்மு, காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 ன் பிரிவு 14 ன் துணைப் பிரிவுகள் (6) மற்றும் (7) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டப் பேரவையில் பட்டியலினம் (SCs) மற்றும் பழங்குடியினர் (STs) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
- இதன்படி, எல்லை நிர்ணய ஆணையம் முதல் முறையாக 9 சட்டப்பேரவைத் தொகுதிகளை பழங்குடியினருக்கும், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கியுள்ளது.
கீழடி அகழாய்வில் செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு
- திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகே உள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு இங்கும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
- ஒரு சில நாள்களுக்கு முன்பு, மனித முகம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆசியாவில் முதல் முறை சென்னையில் பைசர் சர்வதேச ஆய்வு மையம்
- அமெரிக்காவை சேர்ந்த மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமான பைசர், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் மருந்து ஆராய்ச்சி மையத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
- இந்த மையத்தை உருவாக்க 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஐ.ஐ.டி. மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் 61 ஆயிரம் அடி சதுர இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஆய்வு மையத்தில் 250 தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்ற உள்ளனர். இங்கு புதிய மூலக்கூறு,சூத்திரங்கள் மற்றும் மருந்து பொருட்களை உருவாக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது.
- இங்கு பைசர் நிறுவனம் உலகம் முழுக்க விற்பனை செய்து வரும் அனைத்து வகையான மருந்து பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.