ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் சங்க காலத்தைச் சேர்ந்த நெல் உமிகள் கண்டெடுப்பு
- மத்திய தொல்லியல் துறை சார்பில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி கடந்த அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- 62க்கும் மேற்பட்டமுதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
- கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு நடைபெறும் 3பகுதிகளில் ஒரு இடம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
- கடந்த 1902-ம்ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்ற ஆங்கிலேயர் அகழாய்வு செய்த இடத்தின் அருகே, இந்தஅகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த தாழியில் இருந்து, நெல்உமிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தாழியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மண் கலயங்கள், சிறுபானைகள், இரும்பு வாள் ஆகியவை கிடைத்தன.
- எனவே, பழங்காலத்தில் வாழ்ந்த தலைவன் அல்லது போர் வீரனின் தாழியாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பணி விரைவில் நிறைவுற்று, அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர நிலை வாபஸ் - இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு
- இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்டது
- இந்த நிலையில் பொது மக்களின் கொந்தளிப்பு காரணமாக தற்போது அவசர நிலையை வாபஸ் பெறப் போவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்
- இந்த நிலையில் இலங்கையின் கோத்தபய அரசுக்கு இருந்த பெரும்பான்மை இழக்கப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஒலிபரப்புத் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க தனி இணையதளம் தொடங்கியது மத்திய அரசு
- ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் நோக்கில் அதற்கென்றுதனி இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- 'ப்ராட்கேஸ்ட் சேவா போர்ட்டல்' என்ற அந்த தளம் மூலமாக, ஒலிபரப்புத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் தொழிலுக்கான அனுமதி, உரிமம், பதிவு,புதிப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை எளிமையாக மேற்கொள்ள முடியும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கீழடி 8ம் கட்ட அகழாய்வு - ஆறு முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- முதல் கட்டமாக ஒரு குழி தோண்டப்பட்டு வருகிறது. இதில் ஆறு முதுமக்கள் தாழிகளின் மேற்பகுதி தென்பட்டுள்ளது.
- கொந்தகையில் இதுவரை நடந்த அகழாய்வில் வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
- தற்போது கிடைத்துள்ள தாழிகளை முழுமையாக வெளி கொண்டுவரும் பணி நடந்து வருகிறது. அகரத்தில் கடந்த முறை அகழாய்வு நடந்த இடத்தின் அருகே ஒரே ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழு - மு.க.ஸ்டாலின் உத்தரவு
- கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் `தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் தற்போது இந்தகுழு அமைக்கப்பட்டுள்ளது.
- டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
- இக்குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், இராமானுஜம், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் திரு. இராம சீனிவாசன், முனைவர் அருணா ரத்னம், எஸ்.இராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா, துளசிதாஸ், முனைவர் ச.மாடசாமி, இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகிய 12 பேர் இந்த மாநில கல்விக் கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ரூ.500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செய்யார் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் சிப்காட் தொழிற் மையத்திற்கு 634.42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோருக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கிடும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது.
- இதன் முதற்கட்டமாக, லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான M/S செய்யார் SEZ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிற்சாலை அமைத்திட 167.41 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, அந்நிறுவனம் மூலம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்கிட உள்ளது.
வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது
- புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகள் நிவாரண நடவடிக்கைகளை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்கின்றன. கூடுதலான நிதியுதவி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.566.36 கோடி வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது