“தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020” ஐ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-9-2020 அன்று வெளியிட்டார்.
தற்போதைய உட்கட்டமைப்புகள் :
- இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். மேலும், கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கைப்பேசி உற்பத்தி, கணினி மற்றும் அதன் புற உபகரணங்கள், தொழில்துறைக்குத் தேவையான மின்னணு பொருட்கள், நுகர்வோர் மின்னணு மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் போன்ற பொருட்களின் உற்பத்திக்கு வலுவான தளமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வரையில் உள்ள மின்னணுவியல் உற்பத்தி தடத்தில், சாம்சங், டெல், சான்மினா, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை நிறுவி உள்ளன.
வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் நோக்கங்கள் :
- 2025ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியினை, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.7.35 லட்சம் கோடியாக) உயர்த்துதல்.
- இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் தற்போதைய பங்களிப்பான 16 சதவீதத்தை 25 சதவீதமாக உயா்த்துதல்.
- செமி கண்டக்டர் புனையமைப்பு (Semi conductor Fabrication) துறையை தமிழகத்தில் வளா்த்தெடுத்தல்.
- அடுத்த 4 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்னணு வன்பொருள் உற்பத்தித் துறையின் மனிதவளத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்தல்.
- கைப்பேசிகள், எல்இடி தயாரிப்புகள், ஃபேப்லஸ் சிப் வடிவமைப்புகள், பிசிபிக்கள், சோலார் போட்டோவோர்டாய்க் செல்கள், மருத்துவ மின்னணுவியல் மற்றும் மோட்டார் வாகன மின்னணுவியல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் மதிப்புக் கூட்ட அளவினை கணிசமாக அதிகரித்தல்.
- மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி புத்தொழில் தொழிலகங்களுக்கான உகந்த சூழலினை வளர்த்தல்; குறிப்பாக வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள புத்தாக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவித்தல்.
முக்கிய அம்சங்கள்:
முதலீட்டுத் தொகையில் 30% வரை மூலதன மானியம்:
- நில குத்தகைக்கான மானியம் - தொழில் ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் திட்டங்களை செயல்படுத்துபவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்கும் செலவில் 50% மானியம்.
- நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு (டெர்ம் லோன்ஸ்) அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம்.
- மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிலகங்கள் வாங்கும் நிலங்களுக்கு, 50% முதல் 100% வரை முத்திரைத் தீர்வைகளுக்கு விலக்களிப்பு.
- முதன் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம், பெண் ஊழியர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம்.
5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு.
- அறிவுசார் மூலதனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரச் சான்றளிப்பு மானியம்- காப்புரிமை விண்ணப்பங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை 50% மானியம். மேலும், தரச் சான்றிதழ்களுக்கு, ஒரு நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வரை, 50% மானியம்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மானியம் மற்றும் நடைமுறையில் உள்ள தொழில் கொள்கை 2014-ன் படி இதர சலுகைகள்.
- பெரிய முதலீடுகள் அல்லது, அதிகமதிப்பு கூட்டல் / வேலைவாய்ப்பு / சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு, சிறப்பு தொகுப்பு சலுகை வழங்கப்படும்.
- ஒவ்வொரு இஎம்சி-யிலும் தனியார் துறையுடன் இணைந்து, ஒரு திறன் மற்றும் பயிற்சி மையம் நிறுவப்படும். ஒரு லட்சம் நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
- மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையங்களின் அருகில், தொழிலகங்களில் பணிபுரிவோர்க்கு குடியிருப்பு திட்டங்களை உருவாக்குதல்.
- தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், புத்தாக்க மானியங்கள், புத்தொழில் மானியங்கள் , மற்றும் விதை மூலதனம் போன்ற சலுகைகள் மூலம், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு - இரட்டை நகர ஒப்பந்தங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொது வசதி மையங்கள் மற்றும் மின்னணு சோதனை மையங்களை விரிவாக்குதல்.
- மின்னணு பழுது பார்க்கும் பூங்காக்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படும்
(நன்றி : தினமணி, 8-9-2020)