உ.பி, ம.பி, மேற்கு வங்கத்தை விட குறைவு தமிழகத்துக்கு ஏப்ரல் வரி பங்கீடு ரூ.1,928.56 கோடி
- மத்திய அரசு வரி வசூலில் மாதந்தோறும் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்துக்கான வரி பகிர்வை வழங்கியுள்ளது. இதற்கான பட்டியலை நிதியமைச்சகம் வெளியிட்டது.
- மாநிலங்களுக்கு மொத்த வரி பகிர்வாக ₹46,038.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ₹1,928.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகையை விட ஏழு மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- குறிப்பாக, உத்தர பிரதேசத்துக்கு அதிகபட்ச தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அந்த மாநிலத்துக்கு ₹8,255.19 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எல்லா மாநிலங்களை விட இந்த மாநிலத்துக்குதான் வரி பகிர்வு அதிகம். குறிப்பாக, தமிழகத்தை விட 4 மடங்கிற்கு மேல் அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதுபோல், தமிழகத்தை விட சுமார் 2.4 மடங்கு அதிகமாக பீகாருக்கு ₹4,631.96 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேசத்துக்கு ₹3,630.60 கோடி, மேற்கு வங்கத்துக்கு ₹3,461.65 கோடி, மகாராஷ்டிராவுக்கு ₹2,824.47 கோடி, ராஜஸ்தானுக்கு ₹2,752.65 கோடி, ஒடிசாவுக்கு ₹2,131.13 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- மேற்கண்ட ஒதுக்கீடுகளும் தமிழகத்தை விட அதிகம். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக குறைந்த தொகையாக கோவாவுக்கு ₹177.72 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பூஜ்யம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை
- உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- இதனால் அங்கு கச்சா எண்ணெய் விலையும் கடும் சரிவை கண்டுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே விலை குறைந்தது.
- இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது இது தான் முதன்முறை என கூறப்படுகிறது. எனினும், இந்தியா அதிகளவில் வணிகம் செய்யும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் பெரிய வீழ்ச்சி இல்லை. ஒரு பேரல் 25 டாலர்களில் விற்பனை ஆகிறது.
அமெரிக்காவின் உயரிய அறிவியல் அமைப்பின் உறுப்பினராக தமிழர் நியமனம்
- அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பாக அந்நாட்டின் தேசிய அறிவியல் வாரியம் திகழ்கிறது. இதன் உறுப்பினராக தமிழரான சுதர்சனம் பாபுவை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1986-ம் ஆண்டு பொறியியல் முடித்த இவர், 1988-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் தொழில்துறை உலோகவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
- பின்னர் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ப்ரெடிசென் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் தலைவராகவும் உள்ளார்.
- மேம்பட்ட உற்பத்தி, சேர்க்கை உற்பத்தி, உலோகவியல் போன்ற பொறியியல் பிரிவுகளில் 21 வருட அனுபவம் கொண்டவர்.சுதர்னசம் பாபுவை 6 ஆண்டுகளுக்கு தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய அறிவியல் வாரியத்தின் மூன்றாவது அமெரிக்க இந்தியர் இவர் ஆவார். முன்னதாக சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக கேரளாவில் கலக்கி வரும் திரங்கா வாகனம்
- கொரோனா வைரசை ஒழிப்பதற்கு கேரளா திரங்கா வாகனத்தை பயன்படுத்தி துவங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் நாடு முழுமைக்குமான ஊரடங்கை பிறப்பித்து உள்ளது.
- இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் கேரள மாநிலம் முதன்மையாக திகழ்கிறது.
- கொரோனாவை நாட்டில் முதன் முதலாக கண்டுபிடித்த மாநிலங்களில் முதலாவது மாநிலம் கேரளா. அதே போல் அவற்றை கட்டுப்படுத்துவதிலும் முதலாவதாக உள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த திரங்கா வாகனத்தை பயன்படுத்த உள்ளது.
- இதற்காக இன்னோவா கார் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது சுருக்கமாக ஆர்.எஸ்.வி(ரேபிட் ஸ்கிரீன வெகிகிள்) என அழைக்கப்படுகிறது.
- சோதனை முயற்சியாக கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த காரில் 3 சுகாதாரப்பணியாளர்கள் பயணம் செய்கின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்கு கார் செல்கிறது.
- சுகாதாரப்பணியாளர்கள் காரினுள்ளேயே தான் இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு இருவழி மைக்ரோ போனை பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து மக்களிடம் காய்ச்சல் அறிகுறி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
- மேலும் திரங்கா காரில் இன்பரா ரெட் தெர்மோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காருக்குவெளியே நிற்பவரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க முடிகிறது.
- சுகாதார அமைப்பினர் காரை விட்டு வெளியே வராமலேயே சோதனைகள் முடிக்கப்படுகிறது. அதே போல் காருக்குள் இருப்பவர்களை வெளியே இருப்பவர்களால் பார்க்க முடியாது.
- அதே நேரத்தில் கொரோனா தொற்று தென்பட்டலோ அல்லது உடல் வெப்பநிலை நிலை அதிகரித்து காணப்பட்டாலோ அவர்கள் விவரங்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திடம் வழங்கப்படும்.
- அதன்பின்னர் குறிப்பிட்ட நபரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பின் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். தொடர்ந்து அடுத்த கட்டநடவடிக்கையாக ஆர்.எஸ்.வி-2 வாகனத்தை அறிமுகம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு சிங்கப்பூர் பிரதமர் லூங் அறிவிப்பு
- சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுதும் பீதியை கிளப்பி வருகிறது. சிங்கப்பூரில், 8,014 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகி உள்ளனர்.
- வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், பெரும்பாலும் கட்டுமான துறை மற்றும் உணவு விடுதிகளில், வேலை செய்து வருகின்றனர். இவர்கள், மிக நெருக்கடியான விடுதிகளில், கூட்டமாக வசித்து வருகின்றனர்.
- இதனால் அவர்களிடத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சிங்கப்பூரில், கொரோனா பரவலை தடுக்க, மே, 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுஉள்ளது.
- ஆனால், மக்கள், சமூக பரவலை முறையாக கடைப்பிடிக்காததால்,அங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது, ஒரே நாளில், அந்நாட்டில், 1,426 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பிரதமர், லீ சியன் லுாங், ஊரடங்கை, ஜூன், 1ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளார்.அத்தியாவசிய பொருட்களை வாங்க, வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே வரும்படி, அந்நாட்டு மக்களை, பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்குகளை ரூ. 43,574 கோடிக்கு முகநூல் வாங்குகிறது
- பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்கி குறுகிய காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களில் தொடங்கி தொலைத் தொடர்பு வரை பல தொழில்களில் கால் பதித்துள்ள ரிலையன்ஸ் குழுமம் முதல் இடத்தில் உள்ளது.
- முகநூல் நிர்வாகம் ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை $ 5700 கோடி அதாவது ரூ.43574 கோடி விலை கொடுத்து முகநூல் நிறுவனம் வாங்குகிறது. இது முகநூலின் மிக அதிக அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த முதலீட்டினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 5 நிறுவனங்களில் ஒன்றாக ஆகி உள்ளது.
- முகநூல் நிர்வாகம்,'இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவுக்கு எங்கள் பங்களிப்பை நாங்கள் அளித்துள்ளோம். ஜியோ நிறுவனம் உலகில் மிகவும் பரவத் தொடங்கி உள்ளது. ஜியோ நிறுவனம் தொடங்கி நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 38.8 கோடி வாடிக்கையாளர்களை அடைந்துள்ளது. இதன் மூலம் தொலைத் தொடர்பு துறையில் ஒரு புது நிலையை எட்டி உள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் நாங்கள் அதிக அளவில் இந்திய மக்களுடன் இணைகிறோம்.
புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000- முதல்வர் நாராயணசாமி கரோனா நிவாரணம் அறிவிப்பு
- தொழிற்சாலைகளை அவசர அவசரமாகத் திறக்க வேண்டிய அவசிய மில்லை. ஏற்கெனவே புதுச்சேரி அரசு அறிவித்தபடி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
- புதுச்சேரியில் 10 தொகுதிகளிலும், காரைக்காலில் 2 தொகுதிகளிலும் அரிசி வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் அரிசி வழங்கப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் வழங்கப்படும்.
- கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஒவ் வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் 28,160 தொழிலாளர்கள் பயனடைவர்.
- இதேபோல, கட்டிடத் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 42,357 கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவர். இந்தத் தொகை ஏப்22ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக் கப்படும்.
- மத்திய அரசிடம் மிகப்பெரிய அளவில் அரிசி, கோதுமை இருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கியில் ரூ.10 லட்சம் கோடி உபரியாக உள்ளது.
- அந்நிய முதலீடுகள், அந்நியச் செலாவணி கையி ருப்பு 730 பில்லியன் டாலர் இருக்கிறது. இவ்வளவு இருக் கும் நிலையில் மத்திய அரசு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.