குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வா.செ. குழந்தைசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான 'குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஒடிஸா மாநில முதல்வா் அலுவலகத்தில் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.பாலகிருஷ்ணன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டன், கரூா் அரசுக் கலைக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியா் ம.ராஜசேகர தங்கமணி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் பொறுப்பேற்பு
- தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பண்டாலா நாகேஷ் ராவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
- இவா் இந்திய ராணுவ அகாதெமியின் பாராசூட் படை வகுப்பு அணியின் 5-ஆவது படைப்பிரிவில் டிசம்பா் 1982-இல் பணியில் சோந்தாா். மரியாதை வாளுக்கான விருதையும், யுத்த சேவை பதக்கம் மற்றும் சேனா பதக்கத்தையும் பெற்றவா்.
ஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் தெற்காசிய அமைப்பு இணைந்து, உலக அளவில் மனித வளர்ச்சி குறியீடு தொடர்பான கணக்கீடு நடத்தியது. இந்த மதிப்பீடு 3 வெவ்வேறு கோணங்களில் மதிப்பிடப்படுகிறது.
- நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வு, அனைத்தையும் அணுகும் அறிவுமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு நடத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் மொத்தமுள்ள 189 நாடுகளில், இந்தியா தற்போது 129ஆவது இடம் பிடித்துள்ளது.
- இந்தியா முந்தைய ஆண்டைவிட தற்போது ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தப் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 71ஆவது இடம் பிடித்துள்ளது. பூட்டான் 134ஆவது இடத்திலும், வங்கதேசம் 135ஆவது இடத்திலும், நேபாள் 147ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152ஆவது இடத்திலும் உள்ளன.
- பாகிஸ்தான் சென்ற ஆண்டைவிட 2 இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதிலும் உலக அளவில் தெற்காசிய நாடுகள் மனித வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாடு உலக அளவில் தொடர்வதாகவும், இந்தப் பட்டியலில் இந்தியா 122ஆவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு திறனில் 2வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்
- அதிக வேலைவாய்ப்பு திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் அடிப்படையிலான பட்டியலில் சென்னை, கோயம்புத்தூர் முதல் 10 இடத்திற்குள் உள்ளன.
- அதிக வேலைவாய்ப்பு திறன் கொண்ட மாநிலங்கள் மற்றும் நகரங்கள் குறித்து இந்தியா ஸ்கில் 2020 ஆய்வு முடிவு வெளியானது. மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
- இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
- இதில், கடந்தாண்டு 9வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா முதலிடத்திற்கும், 10வது இடத்தில் இருந்த தமிழகம் 2வது இடத்திற்கும் முன்னேறியது. அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
- மேலும், கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த மேற்குவங்கம், தற்போது முதல் 10 இடத்திற்குள் கூட வரவில்லை. நகரங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பு திறன் கொண்டதில் மும்பை முதலிடத்திலும், ஐதராபாத் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு, புதுடில்லி, புனே, லக்னோ, சென்னை நகரங்கள் கடந்த 6 ஆண்டுகளாக 10 இடத்திற்குள் இடம் பெற்று வருகின்றன.
- மேலும், கடந்தாண்டு பட்டியலில் இருந்த நாசிக், குண்டூர் நகரங்களுக்கு பதிலாக மங்களூரு, கோயம்புத்தூர் இடம் பிடித்துள்ளன. பெண்கள் அதிகம்: எம்.பி.ஏ., படித்தவர்கள் 54 சதவீதம் பேர் அதிக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தனர். கடந்தாண்டு இன்ஜினியரிங் படிப்பு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பி.பார்மா, பி.காம்., பி.ஏ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் வேலைவாய்ப்பு சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு கிடைத்தவர்களில் ஆண்கள் 46 சதவீதம் பேரும், பெண்கள் 47 சதவீதம் பேரும் உள்ளனர். இது, 2018ல் ஆண்கள் 48 சதவீதம் பெண்கள் 46சதவீதம் ஆக இருந்தனர்.
'கோல்டன் டுவிட்'டானது மோடியின் செய்தி
- பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தி, இந்தாண்டின், 'கோல்டன் டுவிட்' என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ஓராண்டில், மிக அதிகமானோரால் பேசப்பட்டு, மறுபகிர்வு செய்யப்படும் செய்தி, 'கோல்டன் டுவிட்' என, பாராட்டப்படுகிறது.
- நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து, பிரதமர் மோடி, மே, 23ல், டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, மிக அதிக அளவிலான மக்களை சென்றடைந்து, மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், 'அனைவரும் இணைந்து செயல்படுவோம்; சேர்ந்து வளம் காண்போம்; வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்; மீண்டும் இந்தியா வென்றுள்ளது' என, மோடி தெரிவித்து இருந்தார்.
தெற்காசியாவில் இந்தியா 312 பதக்கம்
- நேபாளத்தின் காத்மண்டுவில் நடந்த 13வது தெற்காசிய விளையாட்டு நேற்று நிறைவு பெற்றது. நேற்றைய கடைசி நாளில் குத்துச்சண்டை பைனல்கள் நடந்தன. இந்தியா சார்பில் பங்கேற்ற விகாஷ் கிருஷ்ணன், 69 கி.கி., எடைப்பிரிவில் பாகிஸ்தானின் ஜெய்ப்பை சாய்த்து தங்கம் தட்டிச் சென்றார்.
- பெண்கள் 64 கி.கி., பிரிவில் இந்தியாவின் மஞ்சு, நேபாளத்தின் பூனத்தை சாய்த்து தங்கம் வென்றார். பெண்கள் 'லைட் பிளைவெயிட்' பிரிவில் இந்தியாவின் கலைவாணி தங்கம் கைப்பற்றினார். குத்துச்சண்டையில் மட்டும் இந்தியாவுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்கள் கிடைத்தன.
- ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் பைனலில் இந்தியா, இலங்கையை சந்தித்தது. இதில் 101-62 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவு பைனலில் இந்திய அணி 127-46 என்ற கணக்கில் நேபாளத்தை சாய்த்து, தங்கம் கைப்பற்றியது.
- பெண்கள் ஸ்குவாஷ் அணி, பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் பெற்றது. ஆண்கள் ஸ்குவாஷ் அணி, 4ல் 3 வெற்றியுடன் இரண்டாவது இடம் பெற, வெள்ளி தான் கிடைத்தது. ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் கைப்பற்றியது.
- மொத்தம் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என இந்தியா 312 பதக்கங்களை குவித்தது. தெற்காசிய விளையாட்டில் இந்தியா வென்ற அதிகபட்சம் பதக்கம் இது. இதற்கு முன் 2016ல் இந்தியா 309 பதக்கம் வென்றிருந்தது.