காவேரிப்பாக்கத்தில் சோழர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு
- சோழர் காலத்தைச் சேர்ந்த முதல் ராஜாதிராஜன் கல்வெட்டு காவேரிப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- முதல் ராஜாதிராஜன், முதல் ராஜேந்திர சோழனின் மகனும், முதல் ராஜராஜனின் பேரனும் ஆவார். அவர் கி.பி. 1018 முதல் கி.பி. 1054 வரை கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்டதுடன் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி புரிந்துள்ளார். இவர் பாண்டியர், சேரர், சிங்களர், மேலை சாளுக்கியர் ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றுள்ளார்.
- இந்த அரசருக்கு ஜெயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராஜேந்திரவர்மன் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. அவரது காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று ஆசிரியர்கள் ஆ.குருநாதன், தி.கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் மாரியம்மன் எனும் மூலத்துவாழியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- மூலத்துவாழியம்மன் கோயிலை அண்மையில் புதுப்பித்தபோது கருவறையின் வெளியில் கிழக்குப்புறச் சுவரிலும், மேற்குப்புறச் சுவரிலும் இரண்டு கற்பலகை துண்டுக் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தக் கல்வெட்டில் முதல் ராஜாதிராஜனின் 29-ஆவது ஆட்சியாண்டில் கி.பி. 1047-இல் ஜயசிங்க குலகால பிரம்ம மாராயன் என்பவரது மகன் தலைக்குலகால பிரம்ம மாராயன் என்பவர் பன்றீசுவரமுடைய மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்கவும், பிடாரி கோயிலில் நாள்தோறும் வழிபாடு செய்யவும், இரண்டு வேலி நிலம் தானமாக அளித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தக் கல்வெட்டு 4 கற்பலகைத் துண்டுகளில் வெட்டப்பட்ட நீண்ட கல்வெட்டாகும். ஆனால், இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற இரண்டு துண்டுகள் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பன்றீசுவரர் கோயிலும், பிடாரி கோயிலும் அக்காலத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது என்றார் அவர்.
"லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை" - உயர்நீதிமன்றம்
- கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஊழலை அறவே நீக்கும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
- இந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் பொது விவகாரங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும் அவற்றை முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை.
- தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்தது.லோக் ஆயுக்தா சட்டம் பிரிவு 3ன் படி லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுபவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு துறை ஆகிய ஏதேனும் ஒன்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவராகவோ இருக்க வேண்டும்.
- அவர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும், இருவர் சட்டத்துறையில் சாராதவர்களாக இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் எவ்விதமான அரசியல் கட்சி தொடர்பு உள்ளவராக இருக்க கூடாது.
- இந்நிலையில் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாசையும் அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்டம் நீதிபதிகள் ஜெயபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.
- அதேபோல டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோரையும் உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர். இது லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது அரசியல் தொடர்புடைய ஒருவரும், நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ஒருவரும், லோக் ஆயுக்தாவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்க இயலாது, இது விதிகளுக்கு எதிரானது.
- இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ் சுந்தர் அமர்வு ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகிய இருவரின் நியமனத்திலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு
- சென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்ளாட்சித்துறையின் பரிந்துரைக்கு இணங்க, இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
- அதில் ஆங்கிலத்தில்,'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாருக்கானுக்கு லண்டன் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கல்
- இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான். தனது சொந்த முயற்சியில் இந்தி சினிமாவில் நுழைந்த அவருக்கு பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் ஒரே நடிகராக இருக்கிறார்.
- இத்தனை சிறப்புகள் கொண்ட ஷாருக்கானுக்கு லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் லா என்ற கல்வி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
- ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே மணல் கொள்ளை நடப்பதாகவும், இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
- இந்நிலையில் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக தேர்வாகியுள்ளார் மயூரி காங்கோ
- 1995 முதல் 2000 வரை சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்த மயூரி 2000 சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் மேலாண்மை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
- பல கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த மயூரி பிரான்ஸின் விளம்பர நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
- இந்நிலையில் கூகுள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜன் அனந்தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு மயூரி காங்கோ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளார்.